திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.15 பாவநாசத் திருப்பதிகம்
பண் - பழம்பஞ்சுரம்
பற்றற் றார்சேற் பழம்பதியைப்
    பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத்
    தீண்டற் கரிய திருவுருவை
(*)வெற்றி யூரில் விரிசுடரை
    விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெம் உத்தமனை
    உள்ளத் துள்ளே வைத்தேனே.

* வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று.
1
ஆனைக் காவில் அணங்கினை
    ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக்
    கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும்
    வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை
    மதியைச் சுடரை மறவேனே.
2
மதியங் கண்ணி ஞாயிற்றை
    மயக்கந் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை
    ஐயா றமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள்
    வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை
    நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.
3
புறம்ப யத்தெம் முத்தினைப்
    புகலூர் இலங்கு பொன்னினை
(*)உறந்தை யோங்கு சிராப்பள்ளி
    உலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற்
    காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்டத்
    தரிமான் ஏற்றை அடைந்தேனே.

(*) உறந்தையென்பது உறையூரைக் குறிக்கும்.
4
கோலக் காவிற் குரமணியைக்
    (*)குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை
    அமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப்
    பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத்
    தோளைக் குளிரத் தொழுதேனே.

(*) குடமூக்கென்பது கும்பகோணத்தைக் குறிக்கும்.
5
மருக ருறையுமா ணிக்கத்தை
    வலஞ் சுழியின் மாலையை
கருகா வூரிற் கற்பகத்தைக்
    காண்டற் கரிய கதிரொளியைப்
பெருவே ளூரெம் பிறப்பிலியைப்
    பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச்
    சிந்தை யுள்ளே வைத்தேனே.
6
எழிலார் இராச சிங்கத்தை
    இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
குழலார் கோதை வரைமார்பிற்
    குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து
    நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத் தம்மானை
    அன்பி லணைத்து வைத்தேனே.
7
மாலைத் தோன்றும் வளர்மதியை
    மறைக்காட் டுறையும் மணாளனை
ஆலைக் கரும்பி னின்சாற்றை
    அண்ணா மலையெம் அண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய
    சுடரிற் றிகழுந் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை
    விருப்பால் விழுங்கி யிட்டேனே.
8
சோற்றுத் துறையெஞ் சோதியைத்
    துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழனத் தம்மானை
    ஆல வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோள்
    நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை அடலேற்றைத்
    தோளைக் குளிரத் தொழுதேனே.
9
புத்தூ ருறையும் புனிதனைப்
    பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை
    வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப்
    பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்றன் மனத்துள்ளே
    (*)மாத்தூர் மேய மருந்தையே.

(*) மாத்தூரென்பது விழுப்புரத்திற்கருகிலுள்ள திருவாமாத்தூரைக் குறிக்கும்.
10
முந்தித் தானே முளைத்தானை
    மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை
    அரக்க னாற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச்
    செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான்
    என்பார் பாவ நாசமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com